சம்பாதி சடாயுவைப் பாராட்டுதல்

4690.விளித்தான் அன்னது
      கேட்டு 'மெய்ம்மையோய்!
தெளித்து ஆடத் தகு
      தீர்த்தன்மாட்டு, உயிர்
அளித்தானே! அது நன்று!
      நன்று!' எனாக்
களித்தான் - வாரி
      கலுழ்ந்த கண்ணினான்.    *

     விளித்தான் - (இவ்வாறு) அனுமன் கூறினான்; அன்னது கேட்டு -
அச் சொற்களைக் கேட்டு; வாரி கலுழ்ந்த கண்ணினான் - நீரைச் சொரியும்
கண்களையுடையவனான சம்பாதி (அனுமனை நோக்கி); மெய்ம்மையோய் -
உண்மை நெறியில் நிற்பவனே; தெளித்து ஆடத்தகு - மனந் தெளிந்து
அனுபவித்தற்குரிய; தீர்த்தன் மாட்டு - புனிதனாகிய இராமபிரான் பொருட்டு;
உயிர் அளித்தானே -
(என் தம்பியான சடாயு) உயிரையும் கொடுத்தானே!
அது நன்று நன்று - அந்தச் செயல் மிகவும் நல்லது!எனாக் களித்தான் -
என்று மனமகிழ்ந்தான்.

     தெளித்து ஆடத்தகு தீர்த்தன் - முழுமுதற் கடவுள் என்று
உறுதிகொண்டு சரணமடைவதற்கு ஏற்ற புண்ணிய மூர்த்தி. தெளிந்து என்ற
சொல் எதுகை நோக்கி தெளித்து என வலித்தல் விகாரமாயிற்று.

     தீர்த்தன்மாட்டு உயிரளித்தான்: சீதையை மீட்டலும் இராம காரியமாகும்
என்பது கருதி. அளித்தானே - நன்று நன்று: ஏகாரமும் அடுக்கும் உவகைப்
பொருளன.                                                    43