இராம நாமம் கேட்டுச் சம்பாதியின் சிறை வளர்தல் 4696. | என்றான், 'அன்னது காண்டும் யாம்' எனா, நின்றார் நின்றுழி, நீல மேனியான் நன்று ஆம் நாமம் நவின்று நல்கினார், வன் தோளான் சிறை வானம் தாயவே. |
என்றான் - என்று (சம்பாதி) கூறினான் (அதுகேட்ட வானரர்கள்); யான் அன்னது காண்டும் எனா - நாங்கள் அதைக் காண்போம் என்று சொல்லி; நின்றார் நின்றுழி - நின்றவர் நின்றபடியே; நீலமேனியான் - நீலமேனியையுடைய இராமனது; நன்கு ஆம் நாமம் - நன்மையை அருளும் 'இராம' என்னும் திருநாமத்தை; நவின்று நல்கினார் - உச்சரித்துதவினார்கள் (அதனால்); வன் தோளான் சிறை - வலிய தோள்களையுடைய சம்பாதியின் சிறகுகள்; வானம் தாய - வானளாவித்தாவி வளர்ந்தன. 'ஏ' : ஈற்றசை. இராம கைங்கரியத்தில் துணைபுரிய வேண்டுமென்ற கருத்தினாலேயே சம்பாதிக்கு வெந்த சிறகை முளைத்திட அப்போதே முனிவர் அருள் புரியவில்லை யென்பதும், இந்த வானர வீரரோடு பேச்சு நிகழ்கையில்தான் அந்தச் சம்பாதியின் சிறகு முளைத்தது என்பதும் வான்மீகத்தால் பெறப்படும். நீலமேனியான் நன்றாம் நாமம்: திருமாலின் ஆயிர நாமங்களுள் சிறந்ததான 'இராம நாமம்' என்பதும் பொருந்தும். 49 |