இராம நாமம் கேட்டுச் சம்பாதியின் சிறை வளர்தல்

4696.என்றான், 'அன்னது காண்டும் யாம்' எனா,
நின்றார் நின்றுழி, நீல மேனியான்
நன்று ஆம் நாமம் நவின்று நல்கினார்,
வன் தோளான் சிறை வானம் தாயவே.

     என்றான் - என்று (சம்பாதி) கூறினான் (அதுகேட்ட வானரர்கள்); யான்
அன்னது காண்டும் எனா -
நாங்கள் அதைக் காண்போம் என்று சொல்லி;
நின்றார் நின்றுழி -
நின்றவர் நின்றபடியே; நீலமேனியான் -
நீலமேனியையுடைய இராமனது; நன்கு ஆம் நாமம் - நன்மையை அருளும்
'இராம' என்னும் திருநாமத்தை; நவின்று நல்கினார் - உச்சரித்துதவினார்கள்
(அதனால்); வன் தோளான் சிறை - வலிய தோள்களையுடைய சம்பாதியின்
சிறகுகள்; வானம் தாய - வானளாவித்தாவி வளர்ந்தன.

     'ஏ' : ஈற்றசை.

     இராம கைங்கரியத்தில் துணைபுரிய வேண்டுமென்ற கருத்தினாலேயே
சம்பாதிக்கு வெந்த சிறகை முளைத்திட அப்போதே முனிவர் அருள்
புரியவில்லை யென்பதும், இந்த வானர வீரரோடு பேச்சு நிகழ்கையில்தான்
அந்தச் சம்பாதியின் சிறகு முளைத்தது என்பதும் வான்மீகத்தால் பெறப்படும்.
நீலமேனியான் நன்றாம் நாமம்: திருமாலின் ஆயிர நாமங்களுள் சிறந்ததான
'இராம நாமம்' என்பதும் பொருந்தும்.                             49