4699. | அன்னானைக் கடிது அஞ்சலித்து, 'நீ முன் நாள் உற்றது முற்றும் ஓத' எனச் சொன்னார்; சொற்றது சிந்தை தோய்வுற, தன்னால் உற்றது தான் விளம்புவான்: |
அன்னானைக் கடிது அஞ்சலித்து - (வானர வீரர்கள்) சிறகு பெற்ற அந்தச் சம்பாதியை விரைந்து கை கூப்பி வணங்கி; முன்னால் உற்றது - முன்காலத்து நடந்த வரலாறு; நீ முற்றும் ஓது - நீ முழுவதையும் கூறுவாய்; எனச் சொன்னார் - என்று வேண்டினார்கள்; சொற்றது சிந்தை தோய்வுற - அவர்கள் கூறியது மனத்தில் பதிய; தன்னால் உற்றது - தனக்கு நேர்ந்ததை (இறகு கரிந்த காரணத்தை); தான் - அந்தச் சம்பாதி; விளம்புவான் - (பின்வருமாறு) சொல்வானாயினான். சம்பாதியை வானரர்கள் அஞ்சலித்தது -அவன் இராமநாமத்தின் பெருமையைத் தமக்குத் தெரிவித்தவனாதலாலும், இராமனுக்குப் பெரிய தந்தை முறையாகி அவனது திருவருளைப் பெற்றவனாதலாலும், மிகவும் வயது முதிந்தவனாதலாலும் என்பது. தன்னால் - உருபு மயக்கம். 52 |