4704.'எம்பியும் இடரின் வீழ்வான்,
      ஏயது மறுக்க அஞ்சி,
அம்பரத்து இயங்கும் யாணர்க்
      கழுகினுக்கு அரசன் ஆனான்;
நம்பிமீர்! ஈது என் தன்மை?
      நீர் இவண் அடைந்தவாற்றை,
உம்பரும் உவக்கத் தக்கீர்!
     உணர்த்துமின், உணர' என்றான்.

     உம்பரும் உவக்கத் தக்கீர் - தேவர்களும் மகிழத்தக்க
தொழிலையுடையவர்களாகிய; நம்பிமீர் - சிறந்த வானர வீரர்களே!இடரின்
வீழ்வான் -
(என் துன்பத்தைக் கண்டு) துயரத்தில் மூழ்கியவனாகிய;
எம்பியும்- என் தம்பியான சடாயுவும்; ஏயது மறுக்க அஞ்சி - (நான்)
ஏவியதைமறுக்க அஞ்சியவனாய்; அம்பரத்து இயங்கும் - வானத்தில்
சஞ்சரிக்கின்ற; யாணர்க் கழுகினுக்கு - வலிய கழுகுகளுக்கு; அரசன்
ஆனான் -
அரசன்ஆயினான்; ஈது என் தன்மை - இதுவே எனது
வரலாறு; நீர் இவண்அடைந்த ஆற்றை - நீங்கள் இங்கு வந்த வரலாற்றை;
உணர உணர்த்துமின்- (நான்) உணரும்படி கூறுக; என்றான் - என்று
கூறிமுடித்தான்.

     யாணர்: அழகு (புதுமை). இங்கு 'வலிமை' என்று பொருள்படும்.    57