4709.'எல்லீரும் சேறல் என்பது எளிது
     அன்று, அவ்இலங்கை மூதூர்;
வல்லீரேல் ஒருவர் ஏகி, மறைந்து
      அவண் ஒழுகி, வாய்மை
சொல்லீரே துயரை நீக்கித்
      தோகையைத் தெருட்டி, மீள்திர்;
அல்லீரேன், என் சொல் தேறி,
      உணர்த்துமின் அழகற்கு அம்மா!

     அவ் இலங்கை மூதூர் - பழமையான அந்த இலங்கைக்கு; எல்லீரும் -
நீங்கள் எல்லோரும்; சேறல் என்பது - (ஒருமிக்கப்) போய்ச் சேர்வது
என்பது; எளிது அன்று - எளிய செயலில்லை; வல்லீரேல்- (ஆனால்)
திறமைமிக்கவராக இருந்தால்; ஒருவர் ஏகி - (உங்களுக்குள்) வல்லமையுடைய
ஒருவர் மட்டும் (தனித்துச்) சென்று; அவண் மறைந்து ஒழுகி -
(அங்குள்ளவர்கள் அறியமுடியாதபடி) அங்கே மறைந்து (சீதையைத் தேடும்)
செயல்புரிந்து; வாய்மை சொல்லீரே - இராமன் கூறிய உண்மை மொழிகளைச்
சொல்லியவர்களாய்; தோகையைத் தெருட்டித் துயரை நீக்கி - சீதைக்குத்
தெளிவூட்டித் துன்பத்தைப் போக்கி; மீள்திர் - திரும்புங்கள்; அல்லீரேல் -
இல்லாவிட்டால் (உங்களில் ஒருவர் போகவில்லையென்றால்); என் சொல்
தேறி -
நான் கூறிய வார்த்தையில் நம்பிக்கை வைத்து; அழகற்கு
உணர்த்துமின் -
அழகுள்ள அந்த இராமபிரானிடம் (சீதை இலங்கையில்
இருப்பதைத்) தெரிவியுங்கள்.

     அம்மா: அசை.

     'அம்ம' என்பதன் நீட்டல.  எல்லீரும்:  முன்னிலைப் பன்மைப் பெயர்.
சொல்லீர் - முற்றெச்சம்.                                         62