வானரரிடம் விடைபெற்றுச் சம்பாதி விசும்பில் செல்லுதல்

4710.காக்குநர் இன்மையால், அக்
      கழுகுஇனம் முழுதும் கன்றி,
சேக்கை விட்டு, இரியல்போகித்
      திரிதரும்; அதனைத் தீர்ப்பான்
போக்கு எனக்கு அடுத்த, நண்பீர்!
      நல்லது புரிமின்' என்னா,
மேக்கு உற விசையின் சென்றான்,
      சிறையினால் விசும்பு போர்ப்பான்.

     காக்குநர் இன்மையால் - (தம்மைப்) பாதுகாப்பவர் இல்லாமையால்;
அக்கழுகு இனம் முழுதும் -
அந்தக் கழுகுக் கூட்டங்கள் அனைத்தும்;
கன்றி -
வருத்தமுற்று; சேக்கை விட்டு - (தம்) இருப்பிடங்களை விட்டு;
இரியல் போகி -
நிலைகெட்டுத் தடுமாறிப் போய்; திரிதரும் - அலைந்து
வாடும்; அதனைத் தீர்ப்பான் - அத் துயரத்தை நீக்கும் பொருட்டு; போக்கு
எனக்கு அடுத்த -
போவது நான் செய்யத்தக்க செயலாகும்; நண்பீர் -
நண்பர்களே!நல்லது புரிமின் - (நான் கூறிய இரண்டனுள்) நன்மைதரக்
கூடியதைச் செய்யுங்கள்; என்னா - என்று கூறி; சிறையினால் விசும்பு
போர்ப்பான் -
(தன்) சிறகுகளால் வானத்தை மறைப்பவனாகிய அச் சம்பாதி;
மேக்கு உற -
மேலே பொருந்த; விசையில் சென்றான் - விரைவாகப் பறந்து
போனான்.

     'இது வரையில் சடாயுவின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த கழுகுகள் அச்
சடாயு இறந்ததால் பாதுகாப்பாரில்லாமல் எளியவற்றை வலியவை வாட்ட.
நிலைகெட்டு வருந்தும்; ஆதலால், அவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு நான்
விரைந்து செல்ல வேண்டியுள்ளது.  அதனால்தான் செல்லுகின்றேன்; நீங்கள்
நான் சொல்லியவற்றுள் ஏற்றதைச் செய்யுங்கள்' என்று கூறிச் சம்பாதி
வான்வழியாகப் பறந்து சென்றான் என்பது.

     சேக்கை -பறவைகளின் கூடு.                               63