4712. | 'சூரியன் வெற்றிக் காதலனோடும் சுடர் விற் கை ஆரியனைச் சென்றே தொழுது, உற்றது அறைகிற்பின், சீர் நிலை முற்றும்; தேறுதல் கொற்றச் செயல் அம்மா; வாரி கடப்போர் யாவர்?' என தம் வலி சொல்வார்; * |
சூரியன் - கதிரவனின்; வெற்றிக் காதலனோடு்ம் - வெற்றியோடு விளங்கும் மைந்தனான சுக்கிரீவனோடும்; சுடர் விற்கை ஆரியனை - ஒளிபொருந்திய வில்லைக் கையிற் கொண்டவனான சிறந்த இராமனையும்; சென்று தொழுது - (பணியை முடிக்காமல்) போய் வணங்கி; உற்றது அறைகிற்பின் - நிகழ்ந்த செய்திகளைச் செல்வோமானால்; சீர்நிலை முற்றும் - சிறந்த (நமது) கடமை ஒருவாறு முடிவுபெறும்; (ஆயினும்) தேறுதல் - (நாமே கடல் கடந்து சீதையுள்ள இடத்தைக் கண்டு) தெளிவது; கொற்றச் செயல் - வீரச் செயலாகும்; (ஆதலால்)வாரி கடப்போர் யாவர் - கடலைக் கடக்கின்ற வல்லமையுள்ளவர் நம்மிலே யார் உள்ளார்; என - என்று சொல்லி; தம் வலி சொல்வார் - தத்தம் வலிமையை எடுத்துக் கூறலானார்கள். சீதையை நேரிலே கண்டு மீண்டு செய்தி தெரிவித்தலே சிறந்த தென்பதைக் குறிக்கும். வாரி: கடல்; அம்மா : வியப்பிடைச் சொல். ஆரியன்: பெருமைக்குரியவன். இராமபிரானை ஆரியன் என்று குறிப்பது இந்நூலில் பெருவழக்காகும். 2 |