4715.'வேதம் அனைத்தும் தேர்தர,
      எட்டா ஒரு மெய்யன்
பூதலம் முற்றும் ஓர் - அடி
      வைத்துப் பொலி போழ்து, யான்
மாதிரம் எட்டும் சூழ் பறை
      வைத்தே வர, மேரு
மோத இளத்தே தாள்
      உலைவுற்றேன் - விறல் மொய்ம்பீர்!   *

     விறல் மொய்ம்பீர் - வலிய தோள்களையுடையவர்களே!வேதம்
அனைத்தும் -
வேதங்கள் யாவும்; தேர்தர எட்டா - தேடிப்பார்க்கவும்
அகப்படாத; ஒரு மெய்யன் - ஒப்பற்ற வடிவுடைய திருமால்; பூதலம்
முற்றும் ஓர் அடி வைத்து -
(திரிவிக்கிரமானகப்) பூமி முழுவதும் ஓர்
அடியைவைத்து அதனுள் அடங்கச் செய்து; பொலி போழ்து - பேருருவம்
எடுத்து விளங்கிய காலத்தில்; மாதிரம் எட்டும் - (நான்) எட்டுத்
திக்குகளிலும்; பறை வைத்தே - பறையடித்து அப் பெருமாள் உலகமளக்கும்
செய்தியைத் தெரிவித்தபடி; சூழ்வர - சுற்றிக் கொண்டு அவன்முன்னே
செல்லும் போது; மேரு மோத - மேருமலை இடையே
தாக்கியதால்; இளைத்து - (நான்) வலிமை குன்றி; தாள் உலைவுற்றேன் -
என் கால்கள் வலியெடுத்து வருந்தினேன்;

     திரிவிக்கிரம அவதார காலத்தில் உலகமுழுவதும் நிறைந்த திருமாலின்
திருவடியை வணங்கிக் கொண்டே பலமுறை பூமியை வலம் வருகையில்
மேருமலை எனது காலிற்பட்டுக் கால் சிறிது ஊனமானதால் இப்போது
கடல்கடக்கும்  வலிமையில்லாதவன் ஆயினேன் என்று சாம்பவான் கூறினான்
என்பது.

     மொய்ம்பு: தோள்.

     எட்டு மாதிரங்கள்: கிழக்கு முதலான பெருந்திசைகள் நான்கு;
தென்கிழக்கு முதலிய கோணத் திசைகள் நான்கு.

     ஐந்து, ஆறு ஆகிய ஒரு செய்யுட்களும் ஒரு தொடராய் இயைந்து
பொருள் முடிவு கொண்டதால் ஆறாவது செய்யுளின் ஈற்றிலுள்ள 'நாலு
முகத்தான் உதவுற்றான்' என்ற தொடர் இங்கு எழுவாயாகக்
கொள்ளப்படுதற்குரியது.                                       5