4716.'ஆதலின், இப் பேர் ஆர்கலி
      குப்புற்று, அகழ் இஞ்சி
மீது கடந்து, அத்
      தீயவர் உட்கும் வினையோடும்,
சீதைதனைத் தேர்ந்து, இங்கு உடன்
     மீளும் திறன் இன்று' என்று
ஓதி இறுத்தான் -
      நாலுமுகத்தான் உதவுற்றான்.

     ஆதலின் - ஆதலால்; இப்பேர் ஆர்கலி - இந்தப் பெரிய கடலை;
குப்புற்று -
தாவித் தாண்டி; அகழ் இஞ்சி மீது - அகழியைச் சார்ந்த
(இலங்கையில்) மதில்கள் மேல்; கடந்து - கடந்து சென்று; தீயவர் உட்கும்
வினையோடும் -
கொடியவர்களான அந்த அரக்கர்கள் அஞ்சிநடுங்கும் வீரச்
செயலுடனே; சீதைதனைத் தேர்ந்து - சீதையைத் தேடிக் கண்டுபிடித்து;
இங்கு உடன் மீளும் -
இங்கே உடனே திரும்பி வரக்கூடிய; திறன் இன்று
என்று -
வலிமை எனக்கு இல்லையென்று; ஓதி இறுத்தான் -
சொல்லிமுடித்தான்; நாலு முகத்தான் உதவுற்றான் - நான்கு
முகங்களையுடைய பிரமதேவன் அருளிய சாம்பவான்.

     ஆர்கலி: நிறைந்த ஓசையையுடைய கடல் - காரணப் பெயர்: வினைத்
தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.

     குப்புதல்: குதித்தல்; தாண்டிக் கடத்தல்.  அகழ்: அகழப்படுவது -
முதனிலைத் தொழிற் பெயர். இஞ்சி : மதில்.                         6