4718. | 'ஆரியன் முன்னர்ப் போதுற உற்ற அதனாலும், காரியம் எண்ணிச் சோர்வு அற முற்றும் கடனாலும், மாருதி ஒப்பர் வேறு இலை' என்னா, அயன் மைந்தன் சீரியன் மல் தோள் ஆண்மை விரிப்பான், இவை செப்பும்: * |
ஆரியன் முன்னர் - (முதலில்) இராமபிரானின் எதிரே சென்று; போதுற உற்ற அதனானும் - (இராமனுக்கும் சுக்கிரீவனுக்கும்) நட்புச் செய்வித்த தன்மையாலும்; காரியம் எண்ணி - (தான்) மேற்கொண்ட செயலை ஆராய்ந்து; சோர்வு அற முற்றும் - சிறிதும் சோர்வில்லாமல் முடிக்கும்; கடனானும் - கடமையைக் கைக் கொண்டமையாலும்; மாருதி ஒப்பார் வேறு இலை என்னா - மாருதியையொப்பவர் வேறெ ஒருவருமில்லை என்று சொல்லி; சீரியன் மல்தோள் - சிறந்தவனான அந்த அனுமனது மற்போருக்கு உரிய தோள்களின்; ஆண்மை தெரிப்பான் - வலிமையைத் தெரிவிக்கும் பொருட்டு; இவை செப்பும் - இவ்வாறான மொழிகளை அனுமனைப் பார்த்து கூறலானான்; அயன் மைந்தன் - பிரமன் புதல்வனான சாம்பவான். தெரித்தல்: தெரியச் சொல்லுதல் இராமனுக்கும் சுக்கிரீவனுக்கும் நட்பைச் செய்தவனும், தான் மேற்கொண்ட செயலை ஆராய்ந்து சோர்வில்லாமல் முடிக்கவல்லவனுமாகிய அனுமனையொப்பவர் வேறு யாருமில்லையென்றார். 8 |