4722. | 'மேரு கிரிக்கும் மீது உற நிற்கும் பெரு மெய்யீர்; மாரி துளிக்கும் தாரை இடுக்கும், வர வல்லீர்; பாரை எடுக்கும்நோன்மை வலத்தீர்; பழி அற்றீர்; சூரியனைச் சென்று, ஒண் கையகத்தும் தொட வல்லீர்; |
மேரு கிரிக்கும் மீது உற - மேரு மலைக்கும் மேலாக; நிற்கும் - ஓங்கி நிற்கும்; பெரு மெய்யீர் - பெரிய உடம்பையுடையீர்; மாரி துளிக்கும் தாரை இடுக்கும் - மேகங்கள் சொரியும் மழைத்துளிகளின் நடுவிடும்; வர வல்லீர் - (சிறு வடிவெடுத்து) நுழைந்து வரும் வல்லமையுடையீர்!பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர் - இப் பூமியையே பேர்த்தெடுக்கும் மிக்க வலிமையுடையவராவீர்! பழி அற்றீர் - (பெரு வரங்களைத் தீய வழியில் செலுத்தாததால் சிறிதும்) பழிப்பில்லாத வராவீர்; சென்று ஒண் கையகத்தும் - மேலே சென்று அழகிய கைகளாலும்; சூரியனைத் தொடவல்லீர் - சூரிய தேவனைத் தொடவும் வல்லவராவீர். அனுமன் தன் உடம்பு வளரவேண்டுமென்று நினைத்தால் மேருமலையைக் காட்டிலும் அவனுடம்பு பெரியதாகும்; அந்த உடம்பைச் சிறிதாக ஒடுக்க விரும்பினால் அணுவைக் காட்டிலும் அவனுடம்பு சிறியதாகும் என்பது. இவ்விரண்டும் யோக சித்திகளும் முறையே மகிமா, அணிமா என்னும் சித்திகளாகும். தாரை: நீரொழுக்கு. நோன்மை வலம்: ஒரு பொருட் பன்மொழி. மேரு கிரிக்கும்: உம்மை உயர்வு சிறப்பு. ஒப்பு: 'பிறியா அறத்தின் அனுமன் வளர்ச்சி பெரு மேருவினிற் பெரியனாம்; சிறிதா யொடுக்குமெனின் மேனியற்ப அணுவானதிற் சிறியனாம்' - (உத்தர -அனுமப்.7) 12 |