4726.'அண்ணல் அம் மைந்தர்க்கு
      அன்பு சிறந்தீர்; அதனானே
கண்ணி உணர்ந்தீர் கருமம்;
      நுமக்கே கடன் என்னத்
திண்ணிது அமைந்தீர்; செய்து
      முடிப்பீர்; சிதைவு இன்றால்;
புண்ணியம் ஒன்றே என்றும்
      நிலைக்கும் பொருள் கொண்டீர்;

     அண்ணல் அம் மைந்தர்க்கு - பெருமையில் சிறந்த அந்த இராம,
இலக்குவரிடத்தில்; அன்பு சிறந்தீர் - பேரன்புடையீர்; அதனானே - அக்
காரணத்தால்; கருமம் கண்ணி உணர்ந்தீர் - செய்ய வேண்டிய செயலை
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்; நுமக்கே கடன் என்ன - (சீதையைத் தேடிச்
செய்தியறிந்து வருவது) உமக்கே கடனாகுமென்று; திண்ணிது அமைந்தீர் -
உறுதியாக ஏற்றுக் கொண்டீர்; சிதைவு இன்று - செயல் செய்வதில் அழிவு
இல்லை; செய்து முடிப்பீர் - எனவே செயலைச் செய்து முடிப்பீர்;
புண்ணியம் ஒன்றே -
புண்ணியம் ஒன்றையே; என்றும் நிலைக்கும்
பொருள் -
எப்பொழுதும் அழியாமல் நிலைக்கக் கூடிய பொருளென்று;
கொண்டீர் -
(மனத்தில் உறுதியாகக்) கருதியிருக்கின்றீர்.

     வானரர் யாவரும் இறப்பதாக இருந்த நிலையில் அதனைத் தடுத்து
அனுமன் பின்னுந் தேடுமாறு ஆலோசனை கூறும் பொழுது சீதையுள்ள இடம்
தெரிந்தனராதலால் 'கண்ணியுணர்ந்தீர் கருமம்' என்றான் சாம்பவான்.
'சிதைவின்றிச் செய்து முடிப்பீர்'  - நீரே இலங்கையிற் சென்று சீதையின்
செய்தியை உணர்ந்து வருந் தொழிலைச் செய்து முடிக்க வேண்டுமென்பது
குறிப்பு.  'இன்றி' என்னும் வினையெச்சம் செய்யுளாதலால் 'இன்று' எனத்
திரிந்து வந்தது.                                                16