4729.'ஏகுமின்; ஏகி, எம் உயிர்
      நல்கி, இசை கொள்ளீர்;
ஓகை கொணர்ந்து உம் மன்னையும்
      இன்னல் குறைவு இல்லாச்
சாகரம் முற்றும் தாவிடும் நீர்,
      இக் கடல் தாவும்
வேகம் அமைந்தீர்!' என்று
      விரிஞ்சன் மகன் விட்டான்.

     நீர் - நீவிர்; இக்கடல் தாவும் - இந்தக் கடலைக் கடந்து சென்று
மீளுவதற்குரிய; வேகம் அமைந்தீர் - வலிமை பொருந்தியுள்ளீர் (ஆதலால்);
ஏகுமின் -
விரைந்து செல்லுக; ஏகி - அவ்வாறு சென்று; எம் உயிர் நல்கி
இசை கொள்ளீர் -
எங்களுக்கெல்லாம் உயிரைக் கொடுத்துப் பெரும்
புகழையடையுங்கள்; உம் மன்னையும் - உம் தலைவனாகிய
இராமபிரானையும்; ஓகை கொணர்ந்து - (சீதை இலங்கையிலுள்ள)
மகிழ்ச்சியான நல்ல செய்தியைக் கொண்டுவந்து; இன்னல் குறைவு இல்லாச்
சாகரம் -
(சீதையின் பிரிவாலான) குறையாத துன்பக் கடல்; முற்றும் தாவிடும்
-
முழுவதையும் கடந்து கரையேறச் செய்யும்; என்று - என்று கூறி;
விரிஞ்சன் மகன் -
பிரமகுமாரனான சாம்பவான்; விட்டான் - (கடலைக்
கடந்து செல்லுமாறு) அனுமனைத் தூண்டிவிட்டான்.

     நீர் கடல் கடந்து சென்றால் இராமபிரானையும் துன்பக் கடலிலிருந்து
கரையேற்றியவராவீர் என்று சாம்பன் குறிப்பாகப் புலப்படுத்தியிருப்பதை
அறியலாம.  எம்முயிர் நல்கி இசை கொள்ளீர்: நீர் கடல்கடந்து
திரும்பிவந்தால் நாங்களும் இப்போது நினைத்தவாறு இறவாமற் பிழைப்போம்;
இவ்வாறு பலரது உயிரைக் காப்பாற்றுவதால் பெரும்புகழும் உமக்குக்
கிடைக்கும் என்றவாறு. தவிர, சீதை, இராமபிரான் முதலிய அனைவரின்
துயரமும், தேவர் துன்பமும் நீங்கக் காரணமாகிய புகழ் எனலாம்.  மன் -
சுக்கிரீவனைக் குறித்ததாகவும் கொள்ளலாம்.  ஓகை : உவகை என்ற
சொல்லின் திரிபு.                                              19