அறுசீர் ஆசிரிய விருத்தம் 4731. | ''' இலங்கையை இடந்து வேரோடு இவ் வயின் தருக'' என்றாலும், ''விலங்கினர் தம்மை எல்லாம் வேரொடும் விளிய நூறி, பொலங் குழை மயிலைக் கொண்டு போது'' எனப் புகன்றிட்டாலும், கலங்கலீர்! உரைத்த மாற்றம் முடிக்குவல் கடிது; காண்டிர்! * |
இலங்கையை - (அனுமன் சாம்பவானைப் பார்த்து) இலங்கை நகரை; வேரோடு இடந்து - வேரோடு பெயர்த்தெடுத்து; இவ்வயின் தருக என்றாலும் - இந்த இடத்திற்குக் கொண்டு வரவேண்டுமென்று (நீங்கள்) கூறினாலும்; விலங்கினர்தம்மை எல்லாம் - எதிர்த்துத் தடுப்போரையெல்லாம்; வேரொடும் விளிய நூறி - அடியோடு அழியுமாறு பொடிப் பொடியாக்கி; பொலங் குழை மயிலை - பொன்னாற் செய்த குழையையணிந்த மயில்போன்ற சாயலையுடைய சீதையை; கொண்டு போது என - எடுத்துக் கொண்டுவா என்று; புகன்றிட்டாலும் - சொன்னாலும்; உரைத்த மாற்றம் முடிக்குவல் - (நீங்கள்) கூறிய சொற்படியே செய்து முடிப்பேன்; கடிது காண்டிர் - (அதை) விரைவிலே கண்கூடாகக் காண்பீர்கள்; கலங்கலீர் - (ஆகவே) கலங்காதீர்கள். கடலைக் கடந்து சீதையைக் கண்டு வருதல் எவ்வாறு முடியுமென்ற சிந்தை உங்களுக்குச் சிறிதும் வேண்டா என்ற கருத்துப்படக் 'கலங்கலீர்' என்றார். முடிக்குவல்: தன்மையொருமை எதிர்கால வினைமுற்று. 21 |