அறுசீர் ஆசிரிய விருத்தம்

4731.''' இலங்கையை இடந்து வேரோடு இவ்
      வயின் தருக'' என்றாலும்,
''விலங்கினர் தம்மை எல்லாம்
      வேரொடும் விளிய நூறி,
பொலங் குழை மயிலைக் கொண்டு
      போது'' எனப் புகன்றிட்டாலும்,
கலங்கலீர்! உரைத்த மாற்றம்
      முடிக்குவல் கடிது; காண்டிர்!   *

     இலங்கையை - (அனுமன் சாம்பவானைப் பார்த்து) இலங்கை நகரை;
வேரோடு இடந்து -
வேரோடு பெயர்த்தெடுத்து; இவ்வயின் தருக
என்றாலும் -
இந்த இடத்திற்குக் கொண்டு வரவேண்டுமென்று (நீங்கள்)
கூறினாலும்; விலங்கினர்தம்மை எல்லாம் - எதிர்த்துத்
தடுப்போரையெல்லாம்; வேரொடும் விளிய நூறி - அடியோடு அழியுமாறு
பொடிப் பொடியாக்கி; பொலங் குழை மயிலை - பொன்னாற் செய்த
குழையையணிந்த மயில்போன்ற சாயலையுடைய சீதையை; கொண்டு போது
என -
எடுத்துக் கொண்டுவா என்று; புகன்றிட்டாலும் - சொன்னாலும்;
உரைத்த மாற்றம் முடிக்குவல் -
(நீங்கள்) கூறிய சொற்படியே செய்து
முடிப்பேன்; கடிது காண்டிர் - (அதை) விரைவிலே கண்கூடாகக் காண்பீர்கள்;
கலங்கலீர் -
(ஆகவே) கலங்காதீர்கள்.

     கடலைக் கடந்து சீதையைக் கண்டு வருதல் எவ்வாறு முடியுமென்ற
சிந்தை உங்களுக்குச் சிறிதும் வேண்டா என்ற கருத்துப்படக் 'கலங்கலீர்'
என்றார்.  முடிக்குவல்: தன்மையொருமை எதிர்கால வினைமுற்று.        21