4732.'ஓசனை ஒன்று நூறும் உள்
      அடி உள்ளது ஆக,
ஈசன் மண் அளந்தது ஏய்ப்ப,
      இருங்கடல் இனிது தாவி,
வாசவன் முதலோர் வந்து
      மலையினும், இலங்கை வாழும்
நீசரை எல்லாம் நூறி
      நினைத்தது முடிப்பல்; பின்னும்,

     ஈசன் - திருமால்; மண் அளந்தது ஏய்ப்ப - உலகத்தையளந்தது
போல; ஓசனை ஒன்று நூறும் - (இங்கிருந்து இலங்கைவரை) நூறு யோசனை
தூரப் பரப்பையும்; உள் அடி உள்ளது ஆக - உள்ளங் காலின் ஓரடி
வைப்புக்குள் அடங்கும்படியாக; இருங்கடல் இனிது தாவி - பெரிய கடலை
மிக எளிதாகத் தாண்டி; வாசவன் முதலோர் - இந்திரன்
முதலான தேவர்கள்; வந்து மலையினும் - (அரக்கர்க்கு உதவியாக)
வந்து என்னையெதிர்த்துப் போர் செய்தாலும்; இலங்கை வாழும் - அந்த
இலங்கை நகரில் வாழுகின்ற; நீசரை எல்லாம் நூறி - இழிவான
அரக்கர்களையெல்லாம் வேரோடு அழித்து; நினைத்தது முடிப்பல் -
மனத்தில் எண்ணிய காரியத்தை முடித்துவிடுவேன்; பின்னும் - மேலும்;

     ஒரு தாவலிலேயே நூறுயோசனை தூரமுள்ள கடலைக் கடந்து
இலங்கைக்குச் செல்லுமாறு பேருருக் கொள்ளப் போகும் அனுமனுக்கு, உலகம்
முழுவதையும் ஓரடியால் அளந்த திரிவிக்கிரமன் உவமையாவான்.
மலையினும்: வாசவன் முதலோர் வந்து மலையமாட்டார் என்ற பொருளை
வற்புறுத்தும்.  யோசனை: ஓர் எல்லையளவு. ஐயரவர்கள் நூலகப் பதிப்பில் 20,
21, 22 ஆகிய மூன்று பாடல்களும் இடம் பெறவில்லை.                 22