நந்தன வனங்கள்முதலியன வெந்தொழிந்த காட்சி 5971. | அகருவும் நறுஞ் சாந்தமும் முதலிய, அனேகம் புகல் இல் நல் மரத்து உறு வெறி, உலகு எலாம் போர்ப்ப, பகரும் ஊழியில் கால வெங் கடுங் கனல் பருகும் மகர வேலையின், வெந்தன-நந்தனவனங்கள். |
பகரும் ஊழியில்- நூல்களில் கூறப்படுவதான யுக முடிவுக் காலத்தில்; காலம் வெம் கடும் கனல் பருகும் மகர வேலையின் - மிகக் கொடிய காலாக்கினி உறிஞ்சி வற்றச் செய்யும் மகரம் முதலிய மீன்கள் வாழும்கடல்கள் (அழிந்தன) போல; அகருவும் நறும் சாந்தமும் முதலிய அனேகம் புகர் இல் நல் மரத்து உறு வெறி - அகில் மரங்களும், நறுமணம் உள்ள சந்தனமரங்களும் முதலான குற்றம் அற்ற சிறந்த பல மரங்களில் பொருந்திய நறுமணம்; உலகு எலாம் போர்ப்ப - உலகம் முழுவதும் வீசிக் கவிந்து கொள்ளுமாறு; நந்தன வனங்கள் - இலங்கையில் இருந்த சிங்காரத் தோட்டங்கள்; வெந்தன - அத்தீயில் வெந்து அழிந்தன. கால முடிவில்,காலக் கொடுந்தீயால், கடல் நீர் வற்றி அழிவது போல, அனுமன் வைத்த தீயால், இலங்கை நகரத்துப் பூந்தோட்டங்கள் அழிந்தன என்பதாம். அகர் - அகில்; புகர் - குற்றம்; வெறி - மணம்; போர்ப்ப - மூட.. (29) |