காலைஊன்றி எழுந்தபோது நிகழ்ந்த மாறுதல்கள் 4755.. | 'இலங்கையின் அளவிற்று அன்றால், "இவ்வுரு எடுத்த தோற்றம்; விலங்கவும் உளதுஅன்று" என்று விண்ணவர்வியந்து நோக்க, அலங்கல்தாழ்மார்பன் முன்தாழ்ந்து அடித்துணைஅழுத்தலோடும், பொலன்கெழுமலையும் தாளும் பூதலம்புக்க மாதோ ! |
இவ்வுரு - (அனுமன்மேற்கொண்ட) இந்த வடிவத்தின்; எடுத்த தோற்றம் - பெருமிதமான உயர்ச்சி; இலங்கையின் அளவிற்றன்று - இலங்கையை எல்லையாகக் கொண்டது அன்று; விலங்கவும் - (அனுமனைத்) தடுத்து நிறுத்தவும்; உளது அன்று என்று - ஒரு பொருளும் இல்லையென்று; விண்ணவர் - தேவர்கள்; வியந்து நோக்க - ஆச்சரியப்பட்டுப் பார்க்க; அலங்கல் தாழ்மார்பன் - மாலைகள் தங்கிய மார்பை உடைய அனுமான்; முன் தாழ்ந்து - முன் புறமாக மேனியை வளைத்து; அடித்துணை அழுத்த லோடும் - இரண்டு திருவடிகளையும் ஊன்றியவுடன்; பொலன்கெழு மலையும் தாளும் - பொன் மயமான மகேந்திர மலையும் அதன் அடிச் சாரலும்; பூதலம் புக்க - பூமியின் அடித்தளத்தைச் சென்று சேர்ந்தன. அனுமன் கொண்டபேருரு இலங்கையை எல்லையாகக் கொண்டதன்று. இவன் இலங்கையடைந்ததும் இவனைத் தடுத்து நிறுத்தும் பொருள் இல்லையே என்று தேவர்கள் கருதினர். அளவு - எல்லை. தோற்றம் - உயர்ச்சி. நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் (குறல் 124) தாழ் - தங்கிய, மாலைதாழ் வியன்மார்ப; (கலித்தொகை 33) தொங்குதல் என்றும் கூறலாம். தாள் - அடிவாரம். இருள்கீள விரி தாள் கயிலாய மலையே (3-ஆம் திருமறை) (15) |