இசையுடை அண்ணல் சென்ற வேகத்தால், எழுந்த குன்றும், பசையுடை மரனும்,மாவும், பல்உயிர்க் குலமும், வல்லே திசை உறச்சென்று சென்று, செறிகடல்இலங்கை சேரும் விசை இலவாகதள்ளி வீழ்ந்தனஎன்ன வீழ்ந்த.
இசையுடை அண்ணல்- புகழ்பெற்ற அனுமன்; சென்ற வேகத்தால் -பாய்ந்துபோன வேகத்தினாலே; எழுந்த குன்றும் - எழுந்து சென்ற மலைகளும்; பசையுடை மரமும் - பிசினைப் பெற்ற மரங்களும்; மாவும் - விலங்குகளும்; பல் உயிர்க் குலமும் - பல உயிர்த் தொகுதிகளும்; வல்லே -விரைவாக; திசையுறச் சென்று சென்று - அனுமன் சென்ற திக்கின் வழியேபோய்ப் போய்; கடல்செறி இலங்கை சேரும் விசை இலவாக - கடலால்சூழப் பெற்ற இலங்கையை அடையும் ஆற்றல் அற்றவையாய்; தள்ளி வீழ்ந்தன என்ன - தள்ளப்பட்டுக் கீழ் வீழ்ந்தாற்போல; வீழ்ந்த - கடலிலே விழுந்தன. (18)