4761.

வெய்தின்வான் சிறையினால் நீர்
    வேலையைக்கிழிய வீசி,
நொய்தின்ஆர்அமுதம் கொண்ட
    நோன்மையேநுவலும் நாகர்,
'உய்தும் நாம்என்பது என்னே ?
     உறுவலிக்கலுழன் ஊழின்
எய்தினான் ஆம்'என்று அஞ்சி,
     அலக்கண்உற்று, இரியல் போனார்.

     வான்சிறையினால் - பெரிய சிறகுகளாலே;நீர் வேலையை - நீர்
நிரம்பிய கடலை; வெய்தின் கிழிய வீசி - வேகமாகப் பிளவு படும்படி வீசி;
நொய்தின் -
எளிதாக; ஆரமுதம் கொண்ட - அருமையான அமுதத்தைக்
கவர்ந்த (கருடனின்); நோன்மையே நுவலும் - வலிமையைப் பேசிக்
கொண்டிருக்கும்; நாகர் - நாகலோக வாசிகள்; உறுவலிக் கலுழன் - மிக்க
வலிமையுடைய கருடன்; ஊழின் எய்தினான் ஆம் - நம்முடைய தீயூழால்
(மறுபடியும்) வந்து சேர்ந்தான் ஆகும்; நாம் உய்தும் என்பது என்னே -
நாம் தப்பிப் பிழைப்போம் என்று கூறுவது எப்படி?; என்று அஞ்சி - என்று
கூறி பயந்து; அலக்கண் உற்று - பெருந்துயர் அடைந்து; இரியல் போனார்
-
சிதறி ஓடினார்கள்.

     எய்தினன் ஆம்என்பதில் உள்ள ஆம் அசை. (21)