4771. | அடல்உலாம்திகிரி மாயற்கு அமைந்ததன் ஆற்றல் காட்ட, குடல் எலாம்அவுணர் சிந்த, குன்றுஎனக்குறித்து நின்ற திடல் எலாம்தொடர்ந்து செல்ல, சேண்விசும்பு ஒதுங்க, தெய்வக் கடல் எலாம்கலங்க, தாவும் கலுழனும் அனையன் ஆனான்.* |
அடல்உலாம்திகிரி மாயற்கு - (அனுமன்) பகைவரைஅடக்குவதில் மிக்க வல்லமை பரவிய சக்கரப்படை ஏந்திய திருமாலுக்கு; அமைந்த தன் ஆற்றல்காட்ட - அடங்கிய தன்னுடைய வன்மையைக் காண்பிக்க; அவுணர் எலாம் குடல் சிந்த - எல்லா அசுரர்களும் குடல் கலங்கவும்; குன்று எனக் குறித்து நின்ற - மலை என்று பேசப்பட்டு நிமிர்ந்து நிற்கின்ற; திடல் எலாம் தொடர்ந்து செல்ல - மேடுகள் யாவும் தொடர்ந்து போகவும்; விசும்பு சேண் ஒதுங்க - ஆகாயம் தூரத்தில் ஒதுங்கிக் கொள்ளவும்; தெய்வக் கடல் எலாம் கலங்க - தெய்வத் தன்மையுடைய எல்லாச் சமுத்திரங்களும் கலங்கவும்; தாவும் கலுழனும் - பறந்து சென்ற கருடனையும்; அனையன் ஆனான் - ஒத்தவன் ஆனான். அனுமன் -தோன்றா எழுவாய். சக்கரப்படை ஏந்திய திருமாலுக்குத் தன்னுடைய வலிமையைக் காட்டப் பறந்து சென்ற கருட பகவானைப்போல அனுமன் விளங்கினான். (31) |