4776.

வலங்கையின் வயிர ஏதி
     வைத்தவன்வைகும் நாடும்
கலங்கியது,'ஏகுவான்தன்
    கருத்துஎன்கொல் ?' என்னும் கற்பால்;
'விலங்குஅயில்எயிற்று வீரன்
     முடுகியவேகம் வெய்யோர்
இலங்கையின்அளவுஅன்று' என்னா,
     இம்பர்நாடுஇரிந்தது இப் பால்.

     வலங்கையின்-வலக்கரத்தில்; வயிர ஏதி வைத்தவன் -
வச்சிராயுதத்தை ஏந்திய இந்திரன்; வைகும் நாடும் - தங்கிய உலகமும்;
கலங்கியது - கலக்கம் அடைந்தது; ஏகுவான்தன் - செல்லும் அனுமனுடைய;
கருத்து என்கொல் என்னும் கற்பால் - திருவுள்ளம் யாதோ என்னும்
ஆராய்ச்சியால்; இப்பால் விலங்கு அயில் எயிற்று வீரன் - இவ்வுலகில்
வளைந்த கூர்மையான பற்களை உடைய அனுமன்; முடுகிய வேகம் -
கடுமையான வேகமானது; வெய்யோர் இலங்கையின் அளவு அன்று
என்னா
- அரக்கர்களுக்குரிய இலங்கையின் எல்லையுடன் அடங்குவது
அன்று என்று கூறி; இம்பர் நாடு இரிந்தது - இந்த உலகம் கலங்கிச்
சிதறியோடிற்று.

     அனுமன் வேகம்இலங்கையுடன் அடங்குவதன்று, நம்மீதும் பாயலாம்
என்று கருதி உலக மக்கள் கலங்கி ஓடினர். 'வலக் கை' என்பது எதுகை
நோக்கி'வலங்கை' எனத் திரிந்தது. கற்பு - கல்வி, ஆராய்ச்சி; உலகம்
தாங்கிய மேம்படு கற்பின் (பதிற்றுப் 59-8) என்றது காண்க. வயிர ஏதி -
வச்சிராயுதம். முள்ளுக்கு இட்ட நெருப்பு மூப்பனையும் அழிக்கும். அதுபோல்
தீயவர்மேல் கொண்ட சீற்றம் நமக்கும் ஊறு விளைக்கும் என்று உலகத்தவர்
கருதினர். (காஞ்சிப் புராணம் - நாட்டுப்படலம் 102)                (36)