மைந்நாக மலையின்தோற்றம் கலிநிலைத் துறை 4779. | இந் நாகம்அன்னான் எறிகால் என ஏகும்வேலை, திந் நாகமாவில், செறி கீழ்த் திசை காவல்செய்யும் கைந் நாகம்,அந்நாள் கடல்வந்தது ஓர் காட்சிதோன்ற, மைந் நாகம்என்னும் மலை வான் உற வந்ததுஅன்றே. |
இ - இந்த; நாகம்அன்னான் - மலையை ஒத்த அனுமன்; எறிகால் எனஏகும் வேலை - பெருங்காற்றைப் போலப் போகின்ற சமயத்தில்; மைந்நாகம்என்னும் மலை - மைந்நாகம் என்று பேசப்படும் மலையானது; தி(க்)நாகமாவில் - எட்டுத் திசைகளிலும் உள்ள யானைகளுக்குள்; செறி கீழ்த்திசை - (மேகம்) செறிந்துள்ள கிழக்குத் திசையில்; காவல் செய்யும் கைநாகம் - பாதுகாக்கும் ஐராவதம்என்னும் மலை; அந்நாள் - பழங்காலத்தில்; கடல் வந்தது ஓர் காட்சி தோன்ற - கடலில் எழுந்து வந்த காட்சியானது புலப்பட; வானுற வந்தது - ஆகாயம் அளாவும்படி தோன்றிற்று. பாற்கடல்கடைந்தபோது ஐராவதம் என்னும் யானை (கடலிலிருந்து) வெளிப்பட்டாற்போல மைநாகமலை அனுமனுக்கு எதிரே வெளிப்பட்டது. திக் +நாகம் - திந்நாகம் மைநாகம் என்னும் சொல் எதுகை நயம் கருதி மைந்நாகம் என அமைக்கப் பெற்றது. நாகமாவில் - யானை என்னும் விலங்குகளில். மாவில் செறி கீழ்த்திசை - சிறந்த ஒளி செறிந்த கிழக்குத்திசை என்று கூறுவாரும் உளர். அன்று, ஏ - அசைகள். கம்பன் அடிப்பொடி அவர்கள் இத்தகைய பாடல்களை அளவியற் கலிநிலைத்துறை என்பர். இத்தகைய பாடல்கள் கம்பராமாயணத்தில் 128 பாடல்கள் உள்ளன. (மணிமலர் 1976) (39) |