அனுமன் மைந்நாகத்தின் மேல் உயர்தல்

 4792.

நீர்மேல்படரா, நெடுங்குன்று
     நிமிர்ந்துநிற்றல்
சீர்மேல் படராதுஎனச் சிந்தை
     உணர்ந்துசெல்வான்
வேர்மேல் பட வன்தலை கீழ்ப்பட
     நூக்கி,விண்ணோர்
ஊர்மேல் படரக்கடிது உம்பரின்
     மீது உயர்ந்தான்.

     நெடுங்குன்று -பெரியமைந்நாக மலையானது; நீர்மேல் படரா
நிமிர்ந்து நிற்றல் -
கடலின் மேலே விரிந்து உயர்ந்திருத்தல்; மேல்சீர்
படராது எனச் சிந்தை உணர்ந்து -
மேலான சிறப்பைப் பெருக்காது என்று
மனத்தே கருதி; செல்வான் - செல்பவனாகிய அனுமன்; வேர்மேல்பட -
மலையின் வேரானது மேலே தெரியவும்; வன்தலை கீழ்ப்பட - வலிமையான
சிகரம் கீழே விழவும்; நூக்கி - (அந்த மலையை) உந்தித் தள்ள; விண்ணோர்
ஊர்மேல் படர -
தேவர்களின் ஊர் தன் மேல் பரவும்படி; கடிது -
வேகமாக; உம்பரின் மீது உயர்ந்தான் - வானின்கண் பாய்ந்தான்;

     மைந்நாகமலையைக்கண்ட அனுமன் இத் தடையால் சிறப்பு உண்டாகாது
என்று கருதி மேல் நோக்கிப் பாய்ந்தான். வெள்ளம் தடையைக் கண்டபோது
அதைக் கடக்க மேலே போவது போன்றது அனுமன் செயல். ஆதலின்
உம்பரின் ஊடு பாய்ந்தான் என்றான்.                         (52)