4795.

அன்னான்அருங்காதலன் ஆதலின்
     அன்பு தூண்ட
என்னால் உனக்குஈண்டு செயற்கு
     உரித்தாயதுஇன்மை
பொன்னார் சிகரத்து இறை ஆறினை
     போதி என்னா,
உன்னாஉயர்ந்தேன் - உயர்விற்கும்
     உயர்ந்ததோளாய் !

     உயர்விற்கும்உயர்ந்த தோளாய் - உயர்ந்துள்ளபொருள்கள்
அனைத்திலும் உயர்ந்த தோள்களையுடையவனே; அன்னான் - அந்த வாயு
தேவனுடைய; அருங்காதலன் ஆதலின் - அருமை மைந்தன் நீ ஆகையால்;
அன்பு தூண்ட - அவன்பால் யான் கொண்ட அன்பானது உந்தித்தள்ள;
ஈண்டு என்னால் உனக்கு - இங்கே என்னால் உனக்கு; செயற்கு உரித்து
ஆயது இன்மை
- செய்வதற்கு உரிய உபகாரம் வேறு இல்லாததால்;
பொன்னார் சிகரத்து - பொன் நிரம்பிய சிகரத்தில்; இறை ஆறினை போதி
என்னா
- சிறிது இளைப்பாறிப் போவாய் என்று; உன்னா - நினைந்து;
உயர்ந்தேன் - மேலே கிளர்ந்து வந்தேன்.

    அனுமனே ! எனக்குஉதவி செய்த வாயுதேவன் புதல்வன் நீ
ஆகையினாலே உனக்கு உதவி செய்வதற்கு மேலே கிளர்ந்து வந்தேன் என்று
மைந்நாகமலை கூறிற்று. ஆறினை - இளைப்பாறியவனாய்.            
(55)