4799.

வருந்தேன்;அது என்துணை வானவன்
     வைத்தகாதல்
அருந்தேன் இனியாதும், என் ஆசை
     நிரப்பிஅல்லால்
பெருந்தேன்பிழிசாலும்நின் அன்பு
     பிணித்தபோதே
இருந்தேன்நுகர்ந்தேன்; இதன்மேல் இனி
     ஈவதென்னோ ?

     மைநாகமலையைப்பார்த்து அனுமான், வருந்தேன் - நான் பறந்து
வந்ததால் சோர்வு அடையேன்; அது - அதற்குக் காரணம்; என்துணை
வானவன் வைத்த காதல்
- எனக்கு ஆதரவாக இருக்கும்
 இராமபிரான்
என்பால்கொண்ட அன்பாகும்; இனி - இப்போது; என் ஆசை
நிரப்பி அல்லால்
- என் விருப்பம் நிறைவேறினால் அல்லாமல்; யாதும்
அருந்தேன்
- எதையும் உண்ணமாட்டேன்; பெருந்தேன் பிழி சாலும் நின்
அன்பு
- பெரியதேனின் பிழிவினை ஒத்த உன்னுடைய அன்பானது; பிணித்த
போதே
- கட்டிப் பிடித்த அப்பொழுதே; இருந்தேன் - உன் வீட்டில் தங்கி;
நுகர்ந்தேன் - உண்டவன் ஆனேன்; இனி இதன்மேல் ஈவது என்னோ
- இப்போது இதற்குமேல் கொடுக்கக்கூடிய பொருள் யாது ?

     இராமபிரான்என்பால் வைத்த கருணையால் யான் சோர்வு
அடையமாட்டேன். என்னுடைய விருப்பம் நிறைவேறினால் அல்லாமல்
எதையும் உண்ணேன். உன் அன்பு என்னைப் பிணித்து விட்டது.
அதனாலேயே உண்டவன் ஆனேன். இனிமேல் தருவதற்கு யாதுளது என்று
அனுமன் கூறினான். நிரப்புதல் - நிறைவேறுதல். நிற்றேடி வருந்த
நிரப்பினையோ (கம்ப. 3611) பெருந்தேன் - மலைத்தேன் (குறுந்தொகை
3)                                                    (59)