4804.

வாள் ஒத்துஒளிர் வால்எயிறு ஊிழின்
     மருங்குஇமைப்ப
நீள்ஒத்துஉயர்வாலின் விசும்பு
     நிரம்புமெய்யன்
கோள்ஒத்தபொன்மேனி விசும்பு இரு
     கூறுசெய்யும்
நாள் ஒத்தது;மேல்ஒளி கீழ் இருள்
     உற்றஞாலம்.*

     வாள்ஒத்துஒளிர்வால் எயிறு - வாளைப் போலப்பிரகாசிக்கும்
வெண்மையான பற்கள்; மருங்கு ஊழின் இமைப்ப - பக்கத்தில் முறையாக
ஒளிவீச; நீள்ஒத்து உயர் வாலின் - நீளத்தைப் பெற்று உயர்ந்த வாலினாலே;
விசும்பு நிரம்பு - ஆகாயத்தை நிறைவுபெறச் செய்யும்; மெய்யன் - சத்திய
வடிவான அனுமனின்; கோள் ஒத்த பொன்மேனி - வலிமை மிக்க
பொன்னிறமான திருமேனி; விசும்பு இரு கூறு செய்யும் - ஆகாயத்தை
இரண்டு விதமாகக் கூறுபடுத்தும்; நாள் ஒத்தது - நாளைப் போன்றிருந்தது;
ஞாலம் - உலகமானது; மேல் ஒளி கீழ் இருள் உற்ற - மேலே ஒளியையும்
கீழே இருளையும் அடைந்த.

     அனுமனின்திருமேனியின் விரிவால் பூமியில் இருள் உண்டாயிற்று.
அவனுக்கு மேலே ஒளி இருந்தது. ஆதலால் அவன் ஒளியையும் இருளையும்
உண்டாக்கும் நாளைப் போன்றிருந்தான். மெய்யன் என்பதற்குஉடம்பைப்
பெற்றவன் என்று கூறின், வானை நிரப்பியது வாலா, மேனியா என்னும்
ஐயப்பாடும் இவனுக்குக் குறைவும் உண்டாக்கும். ஆதலின் மெய்யன் என்பது
அனுமன் என்று கூறப்பட்டது. 'மெய்ம்மை பூண்டான்' என்று 61-ஆம் பாடல்
பேசும். கோள் - வலிமை.                                  (64)