அனுமன் செயலைநோக்கிய தேவர்கள் வாழ்த்துக் கூறல் 4812. | மின்மேற்படர் நோன்மையனாய் உடல் வீக்கம்நீங்கி தன்மேனியளாய் அவள், தாயினும் அன்பு தாழ 'என்மேல்முடியாதன' என்று இனிது ஏத்திநின்றாள் பொன்மேனி யனும்நெடிது ஆசி புனைந்துபோனான்-- |
அவள் - அந்தச் சுரசை; தன் மேனியளாய் - தனக்குரிய இயல்பான உடம்பைப் பெற்றவளாய்; உடல் வீக்கம் நீங்கி - உடலின் பருமன் நீங்கி; தாயினும் அன்பு தாழ - தாயைவிட அன்பு அதிகரிக்க; மேல் - இனிமேல்; முடியாதன என் என்று - உன்னால் செய்ய முடியாதவை யாவை? என்று கூறி; இனிது ஏத்தி நின்றாள் - வாழ்த்தி நின்றாள்; பொன் மேனியனும் - பொன் போன்ற திருமேனி பெற்ற அனுமன்; மின்மேல் படர் நோன்மையனாய் - மின்னலின் மேல் படர்ந்து செல்லும் வலிமையுடையவனாய்; நெடிது ஆசி புனைந்து போனான் - பெரிய வாழ்த்துக்களை அணிந்து சென்றான். சுரசை இயல்பானமேனி பெற்று உன்னால் செய்ய முடியாத செயல்கள் இல்லை என்றாள். அனுமன் சுரசையின் ஆசி பெற்றுச் சென்றான். 'முடியாதது என் எனக்கேல் இனி' என்று நம்மாழ்வார் பேசினார் (2-6,7) சுரசை என்மேல் முடியாதன என்று கூறினாள். (72) |