4817. | துண்டப் பிறைத்துணை எனச்சுடர் எயிற்றாள் கண்டத்திடைக்கறை யுடைக்கடவுள் கைம்மா முண்டத்து உரித்தஉரியால் முளரிவந்தான் அண்டத்தினுக்குஉறை அமைத்தனைய வாயாள். |
பிறைத் துண்டத்துணை என - பிறைத் துண்டத்தின்இரட்டை என்றுசொல்லும்படி; சுடர் எயிற்றாள் - விளங்குகின்ற கோரைப் பற்களை உடையவள்; கண்டத் திடைக் கறையுடைக் கடவுள் - கழுத்தி்ன்கண் விடத்தால் உண்டாகிய நீலநிறம் பொருந்திய சிவபிரான்; கைம்மா - யானையினது; முண்டத்து உரித்த உரியால் - உடம்பிலிருந்து உரித்த தோலாலே; முளரி வந்தான் அண்டத்தினுக்கு - பிரமதேவனால் ஆகிய அண்டத்துக்கு; உறை அமைத்து அனைய - உறை தைத்துப் போட்டால் எவ்வளவு பெரிதாக இருக்குமோ அத்தகைய; வாயாள் - வாயினை உடையவள். தலையற்ற உடலைமுண்டம் என்றும், உடலற்ற தலையைக் குண்டம் என்றும் கூறும் வழக்குண்டு. முனிவர்கள் ஏவிய யானையைச் சிவபிரான் உரித்துப் போர்த்துக் கொண்ட செய்தி புராணங்களில் காண்க. இது கஜ சம்ஹாரமூர்த்தம் - கோயில்களில் காணலாம். (77) |