அறுசீர் விருத்தம்

4829.

தசும்புடைக் கனக நாஞ்சில்
     கடிமதில்தணித்து நோக்கா
அசும்புடைப்பிரசத் தெய்வக்
     கற்பகநாட்டை அண்மி
விசும்பிடைச்செல்லும் வீரன்
     விலங்கிவேறு இலங்கை மூதூர்ப்
பசும்சுடர்ச்சோலைத்து ஆங்கோர்
     பவளமால்வரையில் பாய்ந்தான்.

     பிரசம் அசும்புடை- தேன்கசிதலைப் பெற்ற; தெய்வக் கற்பக
நாட்டை அண்மி -
கற்பக மரங்கள் செழித்த தேவலோகத்தை எட்டி; விசும்பு
இடைச் செல்லும் வீரன் -
ஆகாயத்தே செல்லும் அனுமன்; தணித்து -
வேகத்தைக் குறைத்து; தசும்புடை - குடங்களைப் பெற்றுள்ள; கனக நாஞ்சில்- பொன்மயமான ஏப்புழை அமைந்த; கடிமதில் -
காவலுடன்கூடியமதிலை;நோக்கா - பார்த்து; வேறு விலங்கி - செல்லும்
வழியை மாற்றிக் கொண்டு;மூதூர் இலங்கை - பழைய ஊராகிய
இலங்கையிலுள்ள; பசும்சுடர்சோலைத்து - பசுமையான ஒளியை உடைய;
ஆங்கு ஓர் - சோலையின் ஒருபக்கத்தில் உள்ள; பவளமால் வரையில் -
பவளமலையில்; பாய்ந்தான் -குதித்தான். 

     அனுமன்இலங்கையின் மதிலைப் பார்த்து, வேகத்தைக்
குறைத்துக்கொண்டு செல்லும் வழியை மாற்றிக்கொண்டு பவள மலையில்
குதித்தான். விசும்பிடைச் செல்லும் வீரனின் காட்சியும் சிந்தனையும் (89-195
பாடல்வரை). தசும்பு - கோபுரங்களில் உள்ள கலசம். நாஞ்சில் பொன் மயமாய்
இருக்கும் போலும். இலங்கை முதல் ...... கனக நாஞ்சில் என்று முன்பு கூறப்
பெற்றது. (கம்ப. 4742).                                     (89)