4860. 

வான மாதரோடு இகலுவர் விஞ்சையர் மகளிர்;
ஆன மாதரோடுஆடுவர் இயக்கியர்; அவரைச்
சோனைவார்குழல்அரக்கியர் தொடர்குவர்;
                             தொடர்ந்தால்
ஏனை நாகியர்அருநடக் கிரியை ஆய்ந்திருப்பார்.

(நடனக் கொள்கையில்)

     விஞ்சையர்மகளிர் - வித்தியாதரப் பெண்கள்; வான மாதரோடு
இகலுவர் -
தேவமகளிருடன் மாறுபட்டு ஆடுவார்கள்; ஆன மாதரோடு -
வெற்றியடைந்த விஞ்சை மகளிருடன்; இயக்கியர் ஆடுவர் - இயக்கப்
பெண்கள் ஆடுவார்கள்; சோனை வார் குழல் - மேகம் போன்ற கூந்தலைப்
பெற்ற; அவரை - அந்த இயக்கப் பெண்களை (மாறுபட்டு); அரக்கியர் -
அரக்கப் பெண்கள்; தொடர்குவர் - (ஆடலைத்) தொடர்ந்து
மேற்கொள்வார்கள்; தொடர்ந்தால் - வாடாமல் ஆடினால்; ஏனை - மற்றைய;நாகியர் - நாகலோகப் பெண்கள்;  அரு - அருமையான;
நடக்கிரியை -நாட்டியத்துக்கென்று அமைக்கப்பட்ட கிரியைகளை;
ஆய்ந்திருப்பார் -ஆராய்ந்தபடியிருப்பர். 

     கிரியை -செயல். சிலம்பில் பண்ணுக்கு  எட்டுக்கிரியைகள்
பேசப்பட்டுள்ளன. இது போல் நாட்டியக்கிரியைகள் உண்டு. சோனைவார்
குழல் அவரை என்பதைச் சேர்கிறது. அரக்கியர் கூந்தல் மேகம் போன்று
இராதே. தொல்காப்பியர் இங்ஙனம் சொல்லை மாற்றுதலை மொழிமாற்று
என்பார் (எச்ச - 14)                                      (26)