4874.

வடங்களும்,குழையும், பூணும்
     மாலையும்சாந்தும், யானைக்
கடங்களும்கலினமா விலாழியும்
     கணக்குஇலாத
இடங்களின்இடங்கள்தோறும்
    யாற்றொடும் எடுத்தஎல்லாம்
அடங்கியதுஎன்னில் என்னே !
     ஆழியின்ஆழ்ந்தது உண்டோ ?

     வடங்களும்குழையும் - ஆரங்களும்,குண்டலங்களும்; பூணும்
மாலையும் -
ஆபரணங்களும் மாலைகளும்; சாந்தும் - சந்தனக் குழம்பும்;
யானைக் கடங்களும் - யானைகளின் மும்மதங்களும்; கலின மா -
கடிவாளம் பெற்ற குதிரைகளின்; விலாழியும் - வாய் நுரையும் (இன்னும்);
கணக்கு இலாத -
கணக்கிட முடியாதவையும்; இடங்களின் - வீடுகளின்;
இடங்கள்தோறும் -
விசாலமான இடப் பரப்புகள் தோறும்; யாற்றொடும் -
ஆறுகளாக வந்தனவற்றோடும்; எடுத்த எல்லாம் - எடுத்துக்கொண்டு வந்த
எல்லாப் பொருள்களும்; அடங்கியது என்னில் - அடங்கிவிட்டது என்றால்;
ஆழியின் ஆழ்ந்தது -
கடலினும் ஆழமான நீர்நிலைகள்; உண்டோ -
உள்ளதா; என்னோ - என்ன அதிசயம்.

    வடம் முதலியவும்ஆறுகள் கொண்டுவந்தனவும் அடங்கியது என்றால்
கடலினும் ஆழமான பொருள் உண்டோ. இலங்கையில் கழித்த பொருள்கள்
அடங்குவதால் கடல் பெரியதாம் என்று வியந்து பேசப்பெற்றது. யாறொடு -
ஒடு - அசை. இன்றொடு நாளைக் குறுகவரும் கூற்று.... (புறப்பொருள் 270)
அன்றி ஒடு உருபை ஆல் உருபாகக் கொள்ளலாம். அப்போது ஆற்றால்
எடுக்கப்பெற்ற என்றும் பொருள் கிட்டும். இடம் - வீடு. இடமே பாத்தி ... வீடு
என்றிசைப்பர் (திவா - இடப்பெயர்). குப்பை கொட்டும் பள்ளமே கடல்
(வை.மு.கோ. உரை)                                         (40)