கலிவிருத்தம்

4896.

ஆழிஅகழாக, அருகா அமரர் வாழும்
ஏழ் உலகின்மேலைவெளி காறும், முகடேறக்
கேழ் அரியபொன்கொடு சமைத்த, கிளர்வெள்ளத்து
ஊழிதிரி நாளும்உலையா மதிலை உற்றான்.

(அனுமன்)

     ஆழி அகழ் ஆக -கடலையேஅகழாகக் கொண்டு; அருகா -
அழியாத; அமரர் வாழும் - தேவர்கள் வாழ்கின்ற; ஏழ் உலகின் - ஏழு
உலகங்களுக்கும்; மேலை வெளிகாறும் - மேலே உள்ள வெட்ட வெளி
வரையிலும்; முகடு ஏறி - உச்சியானது உயர்ந்து சென்று; கேழ் - ஒளியுடைய;
அரிய பொன் கொடு - சிறந்த பொன்னைக் கொண்டு; சமைத்த -
அமைக்கப் பெற்ற; கிளர் வெள்ளத்து - சீறுகின்ற வெள்ளப் பெருக்கால்;
ஊழி - யுகமானது; திரிநாளும் - மாற்றம் அடைகின்ற காலத்திலும்; உலையா
மதிலை -
வேறுபாடடையாத மதிலை; உற்றான் - அடைந்தான்.

     ஏழ் உலகின் -இன் - அசை. மருள் நோக்கு என்பதைத் தேவர்
மருளின் நோக்கு என்றார். நச்சர். இன் 'அசை' என்றார். (சிந்தா - 2290) மா -
காய் - காய் - மா என்னும் சீர்களைப் பெற்று வரும் (மணிமலர் 76).   (62)