4900.

மேருவை நிறுத்தி வெளி செய்தது கொல் ?
                           விண்ணோர்
ஊர்புக அமைத்தபடுகால்கொல் ? உலகு ஏழும்
சோர்வு இலநிலைக்க நடுஇட்டது ஒரு தூணோ ?
நீர்புகு கடற்குவழியோ என நினைந்தான்.

(கோபுர வாயில்)

     மேருவை - மகாமேரு மலையை;நிறுத்தி - (கோபுரமாக) நட்டுவைத்து
(பிறகு); வெளிசெய்ததுகொல் - (அதில்) இடையில் வெளியமைக்கப்பட்டதோ
? (கோபுரம்) விண்ணோர் - (பணி செய்து முற்றிய) தேவர்கள்; ஊர்புக -
தங்கள் ஊரை அடைவதற்காக; அமைத்த படுகால் கொல் - அமைக்கப்
பெற்ற ஏணியோ? உலகு ஏழும் - ஏழு உலகங்களும்; சோர்வில நிலைக்க -
சிதைவற்றனவாய் நிலைத்திருக்க; நடு - (உலகின்) நடுப்பகுதியில்; இட்டது
ஒருதூணோ -
நாட்டப்பெற்ற ஒப்பற்ற தூணோ ? (வாயில்) கடற்கு -
கடலின்கண்; நீர்புகு வழியோ - வெள்ளம் புகுவதற்கு (முன்னம்)
அமைக்கப்பட்ட வழியோ; என - என்று பலவிதமாக; நினைத்தான் -
(அனுமன்) எண்ணினான்.                                     (66)