4916. | ஆகாசெய்தாய் ! அஞ்சலை போலும் ? அறிவுஇல்லாய்! சாகாமூலம் தின்றுஉழல்வார்மேல் சலம் என்னாம் ? பாகு ஆர்இஞ்சிப் பொன்மதில் தாவிப் பகையாதே, போகாய் என்றாள் - பொங்கு அழல் என்னப்புகை கண்ணாள். |
பொங்கு அழல்என்ன - மூண்டு எரிகின்ற நெருப்பைப் போல; புகை கண்ணாள் - புகையும் கண்களையுடைய இலங்கைத்தேவி; (அனுமனை நோக்கி) அறிவு இல்லாய் - அறிவற்ற பேதையே; ஆகா செய்தாய் - செய்யத் தகாதவற்றைப் புரிந்தாய்; அஞ்சலை - நீ சிறிதும் பயப்படவில்லை; சாகா மூலம் தின்று - இலைகளையும் கிழங்குகளையும் தின்று; உழல்வார் மேல் - திரிகின்ற அற்பக்குரங்குகள் மேல்; சலம் என்னாம் - கோபம் கொள்வதால் என்ன பயன்; பாகு ஆர் - சுண்ணக்குழம்பு பூசப்பெற்ற; இஞ்சிப் பொன்மதில் - கோட்டையொடு கூடிய மதிலை; தாவிப் பகையாதே- கடந்து சென்று (என்னுடன்) பகைத்துக் கொள்ளாதே; போகாய் - ஓடிப்போவாயாக; என்றாள் - என்று கூறினாள். சாகம் - இலை.'அருந்தவத்தின் சாகம் தழைத்து' (கம்ப. 1671) பகையாதே போகாய் - பகையாமல் செல்க, என்றும் கூறலாம். பகையாதே என்பது ஏவலாகவும் எதிர் மறைப் பெயர் எச்சமாகவும் வரும். (82) |