4926.

விழுந்தாள், நொந்தாள், வெங்குருதிச் செம்புனல்
                                  வெள்ளத்து
அழுந்தாநின்றாள், நான்முகனார்தம் அருள் ஊன்றி
எழுந்தாள்;யாரும் யாவையும், எல்லா உலகத்தும்
தொழும்தாள்வீரன் தூதுவன்முன் நின்று, இவை
                                  சொன்னாள்.

(இலங்கைத் தேவி)

     விழுந்தாள் -பூமியிலேவிழுந்தாள்; நொந்தாள் - (தன்னை) நொந்து
கொண்டாள்; வெம் - வெப்பமான; குருதிச் செம்புனல் வெள்ளத்து -
இரத்தமாகிய செந்நீர் வெள்ளத்து; அழுந்தா நின்றாள் - முழுகினாள் (பிறகு);
நான்முகனார்தம் - பிரம்ம தேவனுடைய; அருள் ஊன்றி - திருவருளைப்
பற்றிக் கொண்டு; எழுந்தாள் - எழுந்து நின்றாள்; எல்லா உலகத்தும் -
எல்லா உலகங்களிலும் உள்ள; யாரும் - உயர்திணைப் பொருள்களும்;
யாவையும் -
அஃறிணைப் பொருள்களும்; தொழும் - கைகூப்பிப் பணியும்;
தாள்வீரன் -
திருவடியையுடைய இராமபிரானின்; தூதுவன் முன் நின்று -
தூதுவனுக்கு முன்னே நின்று; இவை சொன்னாள் - இந்த மொழியைக்
கூறினாள்.

     இலங்கைத் தேவி,பூமியிலே விழுந்தாள்; நொந்தாள்; பிரம்மதேவனின்
திருவருளைப் பற்றிக்கொண்டு எழுந்தாள். இராமதூதனைப் பார்த்துப்
பின்வருமாறு பேசினாள்.

     யாவரும் உயர்திணை, முப்பாலையும், யாவை, அஃறிணை ஒருமை
பன்மையையும்   உணர்த்தும் - (தொல்-சொல்-210, 219)              (92)