இலங்கையின்ஒளியை வியத்தல்

 4931.

வான்தொடர் மணியின் செய்த
     மைஅறு மாடகோடி,
ஆன்றபேர்இருளைச் சீத்துப்
     பகல்செய்தஅழகை நோக்கி,
ஊன்றிய உதயத்துஉச்சி
     ஒற்றைவான்உருளைத் தேரோன்,
தோன்றினன்கொல்லோ ? என்னா
     அறிவனும்துணுக்கம் கொண்டான்.

     மைஅறு மணியில்செய்த - குற்றம் அற்ற மணிகளால் அமைக்கப்
பெற்ற; வான்தொடர் - ஆகாயம் அளாவிய; மாடகோடி - மாளிகையின்
சிகரம்; ஆன்ற - எங்கும் நிரம்பியிருக்கின்ற; பேர் இருளை - மிக்க இருளை;
சீத்து - போக்கி; பகல் செய்த - ஒளியைத் தோற்றுவித்த; அழகை நோக்கி
-
தன்மையைப் பார்த்து; அறிவனும் - அறிஞனாகிய அனுமனும்; வான் -
வானத்தில் இயங்கும்; ஒற்றை உருளைத் தேரோன் - ஒரு சக்கரத்தால்
இயங்கும் தேரையுடைய சூரியன்; ஊன்றிய - நிலைத்த; உதயத்து உச்சி -
உதயகிரியின் சிகரத்திலே; தோன்றினன் கொல் - உதித்து விட்டானோ;
என்று - என்று நினைத்து; துணுக்கம் கொண்டான் - திடுக்கிட்டான்.

     மாடம் -உதயகிரி. மாடகோடி - சூரியன். பகல் - ஒளி - பகற்காலம்.
'பகல் கான்று எழுதரு பல்கதிர்ப் பருதி (பழம்பாட்டு) மாடம் - மாளிகை.
கோடி - உச்சி (சிகரம்)                                       (97)