4946.

ஆலையில்,மலரில், சாரல்
    முழையினில், அமுதவாரிச்
சோலையில்,துவசர் இல்லில்
     சோனகர்மனையில், தூய
வேலையில் கொளஒணாத
     வேற்கணார்குமுதச் செவ்வாய்
வால் எயிற்று ஊறுதீம்தேன்
     மாந்தினர்மயங்கு வாரை-

     ஆலையில் மலரில்- கரும்பிலும் மலரிலும்; சாரல் முழையினில் -
மலைச்சாரலையடுத்த குகையிலும்; அமுதவாரிச் சோலையில் - நீர்ப்
பெருக்குடைய சோலையிலும்; துவசர் இல்லில் - துவசர்களின் வீட்டிலும்;
சோனகர் மனையில் - யனவர் மனையிலும்; தூய வேலையில் - தூய
பாற்கடலிலும்; கொள ஒணாத - பெற முடியாத; வேல் கண்ணார் - வேல்
போன்ற கண்ணைப் பெற்ற மகளிரின்; குமுதச் செவ்வாய் - குமுத மலர்
போன்ற வாயில்; ஊறும் வால் எயிற்று - வெள்ளிய பற்களுக்கிடையில்
ஊறுகின்ற; தீம் தேன் - இனிய தேனை; மாந்தினர் - நன்றாகக் குடித்து;
மயங்குவோரை - மயங்குபவர்களாய அரக்கரையும்.

     துவசர் -கள்விற்பவர்.                                   (112)