4950. | இழைதொடர் வில்லும் வாளும் இருளொடு மலைய, யாணர்க் குழைதொடர்நயனம் கூர்வேல் குமரர்நெஞ்சு உருவக் கோட்டி, முழைதொடர் சங்கு பேரி முகில்என முழங்க, மூரி மழைதொடர் மஞ்ஞை என்ன விழாவொடு வருகின்றாரை- |
இழை தொடர் -ஆபரணங்களிலிருந்து புறப்படும்; வில்லும் - (விட்டுவிட்டு வரும்) ஒளியும்; வாளும் - இடையீடின்றி வரும் ஒளியும்; இருளொடு மலைய - இருளுடன் போர் செய்யுவும்; குழை தொடர் - காதணிகளை அளாவும்; நயனம் - கண்களாகிய; யாணர் - புதுமையான; கூர்வேல் - கூர்மையான வேலை; கோட்டி - செலுத்தி (அதனால்); குமரர் நெஞ்சு - இளைஞர்களின் நெஞ்சங்களை; உருவ - துளைக்கவும்; தொடர் - அடுக்கடுக்கான; முழைசங்கு - துளை பெற்ற சங்குகளும்; பேரி - முரசங்களும்; முகில் என - மேகம் போல; முழங்க - ஆரவாரிக்கவும்; மூரி மழை தொடர் - வலிய மேகத்தின் பால் அன்பு கொண்ட; மஞ்ஞை என்ன -மயில்களைப் போல; விழாவொடு வருகின்றாரை - விழாக் கோலத்துடன் வரும் பெண்டிரையும்; மலைய, உருவ,முழங்க, வருகின்றாரை எனக்கூட்டுக - அன்றி - மலைய, முழங்க, வேல் உருவக் கோட்டி வருகின்றாரை என்றும் பொருள் கொள்ளலாம். வில் - விட்டுவிட்டுப் பிரகாசிப்பது வாள் - தொடர்ந்து பிரகாசிப்பது. வில்லும் வாளும் இருளொடு போர் செய்கிறது (சிலேடை) பெண்மையைச் சிறப்பிக்கும் சங்க நூல்கள் 'விழவு மேம்பட்ட நலன்' (குறுந் 125) குறுமகள் வந்தென விழவாயிற்று (குறுந் 294) என்று பேசும். (116) |