4958. | முன்னிய கனைகடல் முழுகி, மூவகைத் தன்இயல்கதியொடு தழுவி, தாது உகு மன்நெடுங் கற்பகவனத்து வைகிய இன்இளந்தென்றல்வந்து இழுகி ஏகவே. |
(அரண்மனையில்) தாது உகு - மகரந்தப் பொடிகள் சிந்துகின்ற; மன்நெடுங் கற்பக வனத்து - நிலைபெற்ற பெரிய கற்பகச் சோலையில்; வைகிய - தங்கியிருந்த; இன் - இனிமையான; இளந்தென்றல் - இளமையான தென்றற் காற்றானது; முன்னிய - கிளர்ந்துள்ள; கனைகடல் முழுகி - ஆரவாரிக்கும் கடலில் நீராடி; தன் இயல் - தனக்குப் பொருத்தமான; மூவகைக் கதியொடும் தழுவி - மூன்று வகையான நடையைமேற்கொண்டு; வந்து - கும்பகர்ணனின் பக்கம் வந்து; இழுகி ஏக - வருடிச் செல்லவும். முன்னிய -கிளர்ந்தெழுந்த. நளிகடல் முன்னியது போலவும் (பரிபாட்டு 12-7) பணி செய்வோர் நீராடித் தூய்மையுடன் வந்து தொண்டு புரிவர். அதனையே தென்றல் மேற்கொண்டது. மூவகை இயல், மந்த நடை, மத்திய நடை, துரித நடை (அடை பதி) குளிர்ச்சி, மந்தம், பரிமணம் ஆக கதி மூன்றினையும் என்பது பழைய உரை. (அடை - பதி) காளிதாசரும் இம் மூன்று பண்பையே போற்றுவார். கங்கை நீர் தோய்ந்ததால் குளிர்ச்சியும், தேவதாரு மரங்களின் சார்பால் மணமும், மயில்தோகையை அலைத்ததால் மென்மையும் பெற்ற காற்று வேடர்களின் நலிவைப் போக்கிற்று என்பர் (குமார 1-15) (124) |