4976. | இவனைஇன்துணை உடையபோர் இராவணன் என்னே புவனம் மூன்றையும்வென்றது ஓர் பொருள்எனப் புகறல்? சிவனை நான்முகத்தொருவனைத் திருநெடு மாலாம் அவனை அல்லவர்நிகர்ப்பவர் என்பதும் அறிவோ? |
சிவனை - சிவபெருமானும்;நான்முகத்து ஒருவனை - நான்கு முகம் கொண்ட பிரம்மதேவனும்; திருநெடுமாலாம் அவனை - திருமால் என்று புகழப்படும் அவனும்; அல்லவர் - அல்லாத தேவர்கள் (இவனை); நிகர்ப்பவர் என்பதும் - ஒப்பாவார் என்று கூறுவதும்; அறிவோ - அறிவாகுமா ? இவனை - இந்த வீரனை; இன் துணையுடைய - நல்ல உதவியாளனாகப்பெற்ற; போர் இராவணன் - போர் விருப்பம் பெற்ற இராவணன்; புவனம் மூன்றையும் - மூன்று உலகங்களையும்; வென்றது - வெற்றி கொண்டது; ஓர் பொருள் எனப்புகறல் - ஒரு அருஞ்செயல் என்று கூறுவது; என்னே - என்ன அதிசயம். மும்மூர்த்திகட்குச் சமமான வீரனைத் துணையாகப் பெற்ற இராவணன் மூன்று உலகத்தை வென்றது செயற்கரும் செயலன்று. சிவனை, ஒருவனை, அவனை - என்பதில் உள்ள 'ஐ' வேற்றுமையன்று. அசை - நாடார் புகழாளை - கூறி, என்ற (சிந் - 26 பதி) இடத்தில் புகழாள் - விசயை, ஐ - அசை என்று இனியர் குறித்தார். பொருள் - செயல். 'ஒரு பொருள் சொல்லுவதுடையேல்' (கலி. 8) என்ற இடத்தில் இனியர் வரைந்ததைக் காண்க. (142) |