4981. | பாழி நல்நெடுங் கிடங்கெனப் பகர்வரேல் பல்பேர் ஊழி காலம்நின்றுஉலகுஎலாம் கல்லினும் உலவாது ஆழிவெஞ்சினத்துஅரக்கனை அஞ்சி, ஆழ்கடல்கள் ஏழும், இந்நகர்சுலாயகொலாம் என இசைத்தான் |
(அனுமன்) (இந்நீர்ப்பரப்பை) பாழி - பெரும்பரப்புடைய; நல் - சிறந்த; நெடுங் கிடங்கு என - நீண்ட அகழி என்று; பகர்வரேல் - யாவராவது கூறுவாரேயானால்; (பொருந்தாது ஏன்எனில்) பலபேர் - பலமனிதர்கள்; ஊழிகாலம் நின்று - உகமுடிவுக்காலம் வரை உறுதியாயிருந்து; உலகுஎலாம் - எல்லாவுலகங்களையும்; கல்லினும் - தோண்டினும்; உலவாது - அமைக்கவியலாது; (ஆதலால்) இஃது ஆழி - ஆழமான; வெஞ்சினத்து - கொடுஞ்சினத்தையுடைய; அரக்கனை அஞ்சி - அரக்கனுக்குப் பயந்து; ஆழ்கடல்கள் ஏழும் - ஏழுபெருங்கடல்களும்; இந்நகர் - இந்த இலங்கையைச்; சுலாய கொல் - சுற்றியுள்ளனவோ; என - என்று; இசைத்தான் - கூறினான். மனிதரால்படைக்கப்படுவது அகழி. இஃது அன்னது அன்று, என்பது கருத்து. கொல் - ஐயம் ஆம் - அசை. (147) |