கலிவிருத்தம்

4992.

வேரியும்அடங்கின; நெடுங்கடல் விளம்பும்
பாரியும் அடங்கின; அடங்கியது பாடல்
காரியம்அடங்கினர்கள் கம்மியர்கள்; மும்மைத்
தூரியம்அடங்கின; தொடங்கியது உறக்கம்.

(இலங்கையில்)

     வேரியும்அடங்கின - மது உண்போர் முழக்கம் ஒடுங்கின;
நெடுங்கடல் விளம்பும் - கடலைப் போல் முழங்கும்; பாரியும் அடங்கின -
பாரி வாத்தியங்களும் ஒடுங்கின; பாடல் அடங்கியது - பாடல்களும்
ஒடுங்கிவிட்டது; கம்மியர்கள் - பொற்கொல்லர்கள்; காரியம் அடங்கினர் -
தொழில் முடித்து ஒடுங்கி விட்டனர்; மும்மைத் தூரியம் - மூவகையான
முரசங்கள்; அடங்கின - ஒடுங்கி விட்டன; உறக்கம் தொடங்கியது - தூக்கம் தொடங்கிவிட்டது.

     வேரி - கள்.இங்கு கள் குடிப்பவரின் முழக்கத்தைக் குறித்தது. பாரி -
இராக் காவலரின் வாத்தியம். மும்மைத் தூரியம் - என்றது தியாக முரசு,
வீரமுரசு, மணமுரசு என்னும் மூவகை முரசுகளை. மும்மை என்றது
எண்ணப்படு பொருளாகாது மூன்று என்னும் எண்ணைக் குறித்தது. (திருக்குறள்
நுண்பொருள் மாலை 23)                                      (158)