4997.

விரிந்தனநரந்தம் முதல் வெண்மலர் வளாகத்து
உரி்ஞ்சிவருதென்றல் உணர்வுஉண்டு அயல்உலாவ
சொரிந்தனகருங்கண், வரு துள்ளிதரு வெள்ளம்
எரிந்தனபிரிந்தவர்தம் எஞ்சுதனி நெஞ்சம்.

     நரந்தம் முதல் -நரந்தம்முதலாகக் கூறப்பெற்ற; வெண்மலர் -
வெண்மையான பூக்கள்; விரிந்தன - மலர்ந்தன; வளாகத்து - அவ்விடத்தில்;
உரிஞ்சி வருதென்றல் -
மலர்களை உராய்ந்து வந்த தென்றல்; உணர்வு -
உணர்ச்சியை; உண்டு - கவர்ந்து; அயல் உலாவ - பக்கத்தில் இயங்க
(அதனால்); கருங்கண் வரு - (கூட்டமின்மையால்) கருத்த கண்களில்
வெளிப்படும்; துள்ளி - துளிகள்; தரு - தோற்றுவித்த; வெள்ளம் -
நீர்ப்பெருக்குகள்; சொரிந்தன - விழுந்தன; பிரிந்தவர்தம் - காதலரைப்
பிரிந்தவர்களுடைய; எஞ்சு - (நாணம் முதலானவை நீங்க) மிஞ்சியிருந்த;
தனிநெஞ்சம் -
தனியான உள்ளம்; எரிந்தன - (பிரிவாற்றாமல்) வெந்தன.

     கண்கள் சொரிந்தஅருவி நெஞ்சக் கனலை அவிக்கவில்லை. நரந்தம்,
புல்லென்பர் சிலர். மலர் என்பர் சிலர். அழகர், நரந்தநறுமலர் என்னும்
பரிபாடலுக்கு (பரி 16 - 14 - 15) நரந்தம் போலும் நறியமலர் என்றார். இனியர்,
'நரந்தம் நாறிருங்கூந்தல்' என்னும் குறிஞ்சிக் கலிக்கு (குறிஞ்சி 18 - 5) நரந்தம்
பூ நாறும் கரிய கூந்தல் என்று உரை வகுத்தார். கவிச்சக்கரவர்த்தி'
வெண்மலர்' என்றதால் இனியரை ஆதரித்தனர் போலும்.            (163)