5000. | ஆயபொழுது,அம் மதில் அகத்து அரசர் வைகும் தூயதெரு ஒன்றொடுஒருகோடி துருவிப் போய், தீயவன் இருக்கைஅயல், செய்த அகழ் இஞ்சி மேயது கடந்தனன்- வினைப்பகையை வென்றான். |
ஆயபொழுது -(இலங்கைஉறக்கத்திலிருந்த) அப்பொழுது; வினைப் பகையை வென்றான் - வினையாகிய பகையை வென்ற அனுமன்; அம் மதில் அகத்து - அந்த மதிலுக்குள்ளே; அரசர் வைகும் - அரசர்கள் தங்கியிருக்கும்; தூய - தூய்மையான; ஒன்றொடு ஒரு கோடி தெரு - இரண்டு கோடித் தெருக்களை; துருவிப் போய் - தேடி அப்புறத்தே சென்று; தீயவன் - இராவணனின்; இருக்கை அயல் செய்த - அரண்மனையின் பக்கலில் அமைக்கப்பட்ட; மேயது - பொருந்திய; அகழ் இஞ்சி - அகழியையும் மதிலையும்; கடந்தனன் - தாண்டினான். அனுமன்,அரசர்கள் இருக்கும் இரண்டு கோடித் தெருக்களைக் கடந்து இராவணனின் அரண்மனையைச் சார்ந்த அகழியையும் மதிலையும் கடந்தான். (166) |