5002.

முயல்கருங்கறை நீங்கிய மொய்ம்மதி
அயர்க்கும்வாள்முகத்து ஆர்அமுது அன்னவர்
இயக்கர்மங்கையர் யாவரும் ஈண்டினார்
நயக்கும் மாளிகைவீதியை நண்ணினான்.*

(அனுமன்)

     முயல் - முயலாகிய;கருங்கறை - கறுத்த களங்கம்; நீங்கிய -
இல்லாத; மொய்மதி - பூரண சந்திரனை; அயர்க்கும் -  ஒத்திருக்கும்;
வாள்முகத்து -
 ஒளிமிக்க முகத்தை உடைய;  ஆர் அமுது அன்னவர் -
அரிய அமுதம் போன்ற; இயக்கர் மங்கையர் யாவரும் - எல்லா யட்சப்
பெண்களும்; ஈண்டினார் - நெருங்கியிருந்து; நயக்கும் - விரும்பியிருக்கும்;
மாளிகை வீதியை -
மாளிகை நிரம்பிய வீதியை; நண்ணினான் -
அடைந்தான்.

     களங்கம்நீங்கிய முழுமதி போன்ற முகத்தை உடைய யட்சப் பெண்கள்
வாழும் வீதியை அனுமன் அடைந்தான். அயிர்த்தல் - என்னும் வினைச்சொல்
உவம உருபுப் பொருளைத் தந்தது. எல்லாவினைச் சொற்களும் உவம உருபு
போல அமைவதை அறிக. இதனை இனியர் உவம வாசகம் என்பர்.(சிந்தா. 10.)
                                                          (168)