5004. | அத்திரம்புரை யானை அரக்கன் மேல் வைத்தசிந்தையர் வாங்கும் உயிர்ப்பிலர் பத்திரம் புரைநாட்டம் பதைப்பு அற சித்திரங்கள்என இருந்தார் சிலர். |
சிலர் - சிலயட்ச மகளிர்;அத்திரம் - மலையை; புரை - ஒத்த; யானை அரக்கன் மேல் - யானையை உடைய இராவணன்பால்; வைத்த - நிறுத்திய; சிந்தையர் - மனத்தைப் பெற்றவராய்; வாங்கும் உயிர்ப்பிலர் - உள்ளே நுழையும் மூச்சற்று; பத்திரம் புரை - அம்பைப் போன்ற; நாட்டம் - கண்கள்; பதைப்பு அற - இமைத்தல் இன்மையால்; சித்திரங்கள் என - ஓவியங்களைப் போல; இருந்தார் - அமர்ந்திருந்தனர். சிந்தை ஒன்றன்பால்பதிந்தால் மூச்சும் கண்களும் தம் இயல்பை மறக்கும். 'யானை போலும் இராவணன்' என உரை கூறல் ஆகாமை. 'மலை போலும் யானை போலும் உவமை' என வந்து உவமைக்குவமை என்னும் குற்றம் வருதலின். (170) |