5018.

உழை உழைப்பரந்த வான
     யாற்றுநின்று, உம்பர் நாட்டுக்
குழைமுகத்து ஆயம்தந்த
     புனல்குளிர்ப்பு இலஎன்று ஊடி
இழைதொடுத்துஇலங்கும் மாடத்து
     இடைதடு மாறஏறி
மழை பொதுத்துஒழுகு நீரால்
     மஞ்சனம்ஆடு வாரும்.

     உம்பர் நாட்டு -விண்ணுலகத்தைச் சார்ந்த; குழை முகத்து ஆயம் -
காதணியணிந்த முகத்தை உடைய மகளிர்; உழை உழை - (ஆகாயத்தில்)
இடங்கள் தோறும்; பரந்த - பரவியுள்ள; வான யாற்று நின்று - ஆகாய
கங்கையிலிருந்து; தந்த புனல் - கொண்டு வந்த தண்ணீர்; குளிர்ப்பு இல -
குளிர்ச்சியில்லாதன; என்று - என்று கருதி; ஊடி - அவற்றை வெறுத்து;
இழை தொடுத்து -
 ஆபரணங்கள்தொடுக்கப்பெற்று (அதனால்); இலங்கும்
மாடத்து -
விளங்கும் உப்பரிகையில்; இடை - இடையானது; தடுமாற -
வருத்தம் அடைய; ஏறி - ஏறிப் போய்; மழை - மேகத்தை; பொதுத்து -
துளையிட்டு; ஒழுகும் நீரால்- பொழியும் நீர்ப்பெருக்கால்; மஞ்சனம்
ஆடுவாரும் -
நீராடுகின்றவர்களும்.

    யாற்று நீரினும்மேகநீர் குளிர்ச்சியுடையது 'மந்தி... சுனைநீர்...
குளிர்ந்தில என்று ஊடி.... கொண்டல் இறைக்கீறி வாய்மடுக்கும் ஈங்கோயே'
(ஈங்கோய் 19) இரணியவதைப் படலத்தும் இந்தக் கருத்துப் பேசப்படுகிறது.
அங்கு கொண்டல் நீரினும் புறக்கடல் நீர் குளிர்ந்தது என்று பேசப்பட்டது
(கம்ப. 6192)                                             (184)