5021. | ஆணியின்கிடந்த காதல் அகம்சுடஅருவி உண்கண் சேண்உயர்உறக்கம் தீர்ந்த சிந்தையர்செய்வது ஓரார், வீணையும் குழலும்,தம்தம் மிடறும்வேற்றுமையின் தீர்ந்த பாணிகள் அளந்த பாடல் அமிழ்துஉகப் பாடுவாரும். |
ஆணியின் -தைக்கப்பெற்ற ஆணியைப் போல; கிடந்த - தங்கியிருக்கின்ற; காதல் - காதலானது; அகம் சுட - (இராவணனை வெறுத்த) உள்ளத்தை வருத்த; அருவி உண்கண் - அருவி போன்ற கண்களையும்; சேண் உயர் - மிகவுயர்ந்த; உறக்கம் தீர்ந்த - உறக்கம் விலகப் பெற்ற; சிந்தையர் - உள்ளமும் உடையவராய்; செய்வது ஓரார் - செய்யத்தக்கவற்றை அறியாது; வீணையும் - வீணையின் ஓசையும்; குழலும் - குழலின் ஓசையும்; தம்தம் மிடறும் - தங்களுடைய குரலும்; வேற்றுமையின் தீர்ந்த - வேறுபாடு இல்லாததும்; பாணிகள் - தாளத்தால்; அளந்த பாடல் -வரையறுக்கப்பட்டதும் ஆகிய பாடல்களை; அமிழ்து உக - அமிழ்தம் சிந்தும்படி; பாடுவாரும் - பாடுகின்றவர்களும். காதல் அகம்சுடவும், இசை வழாமற் பாடுவது சிறப்பு. அருவி உண்கண் என்பதில் உள்ள உண் என்பது உவம வாசகம் - சேல் உண்ட ஒண்கணார் என்று நாட்டுப் படலம் பேசும் (நாட் - படலம் 13) பாணி - தாளம். அளந்த - வரையறுத்த. (187) |