5035. | மானுயர்த்திரு வடிவினள் அவள்; இவள் மாறுகொண்டனள்; கூறின் தான் இயக்கியோ? தானவர் தையலோ ? ஐயுறும் தகைஆனாள் ! கான் உயர்த்ததார் இராமன்மேல் நோக்கிய காதல்காரிகையார்க்கு மீன்உயர்த்தவன் மருங்குதான் மீளுமோ ? நினைந்ததுமிகை என்றான். |
அவள் - சீதாப்பிராட்டி;மானுயர் திருவடிவினள் - அழகிய மானிட மங்கையின் வடிவையுடையவள்; இவள் - இங்கே உறங்கும் இவளோ; மாறு கொண்டனள் - (மானிடரினும்) மாறுபட்ட வடிவத்தைப் பெற்றுள்ளாள்; கூறில் - (இவற்றை) கூறுபடுத்தி ஆராய்ந்தால்; தான் - இவள்; இயக்கியோ - யட்சப்பெண்ணோ ? ; தானவர் தையலோ - அசுரகுலப் பெண்ணோ?; ஐயுறும் -சந்தேகப்படுதற்கேற்ற; தகை ஆனாள் - தன்மையைப் பெற்றுள்ளாள்;காரிகையார்க்கு - மகளிர்க்கு; கான் உயர்த்த - மணத்துக்குச் சிறப்பைத்தந்த; தார் - மாலையணிந்த; இராமன் மேல் - இராமபிரான்பால்; நோக்கிய- சென்ற; காதல் - காதலானது; மீன் உயர்த்தவன் மருங்குதான் - மீன்கொடியை உயர்த்திய மன்மதன் பக்கலில்கூட; மீளுமோ - திரும்பிவருமோ?; நினைந்தது - (இவள் சீதை என்று) எண்ணியது; மிகை என்றான்- குற்றம் என்று கருதினான். மானுயர் -மனிதர் - (மானுஷர் - மானுடர் - மானுயர்) மானுயர் இவர் என மனக் கொண்டாய் எனின் (காட்சி 127) மீன் உயர்த்தவன் - மன்மதன்.மீனேறுயர்த்த கொடிவேந்தன் (சிந்தாமணி 6) நோக்கிய - சென்ற - மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின (சித்திரகூட 41). மிகை - குற்றம். (201) |