5036. | இலக்கணங்களும் சிலஉள; என்னினும் எல்லைசென்று உறுகில்லா அலக்கண் எய்துவதுஅணியது உண்டு; என்று எடுத்து அறைகுவதுஇவள் யாக்கை; மலர்க்கருங்குழல் சோர்ந்து, வாய்வெரீஇச், சில மாற்றங்கள் பறைகின்றாள் உலக்கும் இங்குஇவள் கணவனும்; அழிவும் இவ் வியன்நகர்க்கு உளது என்றான். |
சிலஇலக்கணங்களும் உள - (இவள்பால்) சிலநல்லிலக்கணங்கள் உள்ளன; என்னினும் - என்றாலும்; இவள் யாக்கை - இவளுடைய உடலின் அடையாளம்; எல்லை சென்று உறுகில்லா - முடிவைச் சென்று சேராத; அலக்கண் - துன்பத்தை; எய்துவது - அடைவது; அணியது உண்டு - சமீபத்தில் இருக்கிறது; என்று எடுத்து அறைகுவது - என்று எடுத்துரைக்கின்றது (இவள்); மலர்க் கருங்குழல் - மலரணிந்த கரிய கூந்தலானது; சோர்ந்து - அவிழ்ந்து; வாய் வெரீஇ - வாய்குழறி; சில மாற்றங்கள் - சில சொற்களை; பறைகின்றாள் - கூறுகின்றாள்; இவள் கணவனும் - இவளுடைய கணவனும்; இங்கு உலக்கும் - இங்கே இறப்பான்; இ வியன் நகர்க்கு - இந்த பெரிய நகர்க்கு; அழிவும் - நாசமும்; உளது - இருக்கிறது. என்றான் - என்று கருதினான். பறைகின்றாள் -கூறுகின்றாள். ஏதம் பறைந்து அல்ல செய்து (திவ்ய திருவாய் 4-6-8) யாக்கை என்றது யாக்கையின் அடையாளங்களை. (202) |